Thursday, October 24, 2019

அர்ச்சனை, உண்டியல் என அக்கிரகாரத்தைக் கொழுக்க வைக்காத சாமி போதும் .. அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 10

வினவு.com  வீரத் திராவிடர் என்ற ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப் பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 10.
 நமக்கு நாலு, ஆறு, நாற்பத்தெட்டுக் கண்படைத்த கடவுள்கள் வேண்டாம். நமக்கு ஒரே ஆண்டவன் போதும். உருவமற்ற தேவன் ! ஊன் வேண்டாத சாமி! ஊரார் காசைக் கரியாக்கும் உற்சவம் கேட்காத சாமி! ஆடல் பாடல் அலங்காராதிகள், அப்பம் பாயசம் அக்காரவடிசில் கேட்காத சாமி! அங்கே, இங்கே என்று ஆளுக்கு ஆள் இடத்தைப் பிரித்து வைக்காத சாமி! அர்ச்சனை, உண்டியல் என்று கூறி, அக்கிரகாரத்தைக் கொழுக்க வைக்காத சாமி இருந்தால் போதும். நம்மிடமிருந்து தியானத்தை பெறட்டும். அருளைத் தரட்டும்; நம்மிடமிருந்து தட்சணை பெற்றுத் தர்ப்பாசூரர்களுக்குத் தானம் தரும் தேவதைகள் நமக்கு வேண்டாம் என்பதை உறுதிப்படுத்தவே, நாம் நம்மை இந்து அல்லவென்று கூறுகிறோம்.
ஆள் நடமாட ஓர் உலகம், ஆவி உலவ மற்றோர் உலகம்; இந்திரன் இருக்க ஓர் உலகம், நாகன் தங்க ஓர் உலகம் ; மேலே ஏழு, கீழே ஏழு எனப் பதினான்கு உலகங்களாம்! அதல, விதல, சுதல, தராதல, இரசாதல, மகாதல, பாதாளம் என ஏழாம்! பூலோக, புவலோக, சுவலோக, சனலோக, தபலோக, மகலோக, சந்திரலோகம் என மேல் உலகம் ஏழாம்! இத்தனை உலகங்கள் இந்துவுக்கு உண்டு ஏட்டிலே.

நமக்கு இவை வேண்டாம்; நாமிருக்கும் நாடு நமக்கு இருந்தால் போதும்; நன்செயும், புன்செயும், சாலையும், சோலையும், வாவியும் நதியும், மக்களும் சுபீட்சமும் இருக்கட்டும். காமதேனுவும் கற்பக விருட்சமும், ரம்பையும் ஊர்வசியும் இருக்கிற உலகத்திலே, டாக்டர் வரதராஜுலுவே உலவட்டும்! முடிசூட்டிக் கொள்ளட்டும்! நாமிருக்கும் நாட்டிலே நமது உழைப்பு நமக்குப் பயன்பட்டு, நாலு ஜாதியிலே நாம் கீழ் ஜாதி என்ற கொடுமை இன்றி “நாமார்க்குங் குடியல்லோம்” என்று நாம் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தில்தான், நாம் நம்மை இந்து அல்ல என்று கூறிக்கொள்கிறோம்.
நாம் யாருக்கும் மேல் அல்ல, யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் ஐயர்மார் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது. தர்ப்பை ஆகாது. சேரியும் கூடாது. அக்கிரகாரமும் ஆகாது. யோக யாகப் புரட்டுகள், புரோகிதப் பித்தலாட்டம், மனுக் கொடுமை வேண்டாம். மனிதர் யாவரும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படித் தம்மை ‘இந்து’ என்று கூறிக்கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை, சூத்திரன் என்று கூறிக்கொள்ள எப்படித்தான் மனம் இடந்தரும்? எப்படித்தான் துணியும்?
இந்து மதம் என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கதை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை அலசிப் பார்த்த பிறகு யாருக்குத்தான் தன்னை ஓர் “இந்து” என்று கூறிக் கொள்ள மனம் இடந்தரும்? பாம்பை எடுத்துப் படுக்கையில் விட்டுக் கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக் குப்பையை வீட்டுக்குள் கொண்டு போய்ச் சேர்ப்பாரா? மதி துலங்கும் விஷயங்களை விட்டு, மதி கெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீள மார்க்கம் தேடுவதை விட்டு, மாளவழி தேடிக்கொள்வாரா? விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்பமிடுவாரா? கண் தெரியும் போது குழியில் வீழ்வாரா? தாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் இந்து மார்க்கத்தில் போய்ச் சேர இசைவாரா? வீரத் திராவிடர் என்ற ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! அதன் இடுக்கில் போய்ச் சேரார்; இழிவைத் தேடார்!

டாக்டர் நாயுடு, ஆரியராவது திராவிடராவது என்று கூறும் அவசரவாதி. எல்லாம் கலந்துவிட்டது என்று பேசும் சமரசவாதி. ஆராய்ச்சியாளர்கள் அவர் போல், அரசியல் ஊஞ்சலில் உள்ளவர்களல்லர்; அவர்களின் அபிப்பிராயம் படிப்பாலும் பண்பாலும், விருப்பு வெறுப்பு அற்ற விவேக விளக்கத்தாலும் உண்மையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உயர் நோக்கத்தாலும் உண்டாவன. இந்துமகா சபையிலே சேர்ந்தோம்; எனவே இனி அதற்குத் தக்கபடி கருத்தைத் திருத்தி அமைப்போம் என்ற முறை டாக்டர் வரதருக்குப் பிரியமாக இருக்கலாம். அறிஞர், தமது அபிப்பிராயத்தை அப்படி விபச்சார விடுதிக்கு அனுப்பிட மாட்டார்கள்.
(தொடரும்)
அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

No comments:

Post a Comment